ஹார்முஸ் முடக்கம்: ஈரான் அதிகாரிகளுக்கு பொருளாதார தடை விதிக்கும் ஐரோப்பிய ஒன்றியம்
ஐரோப்பிய ஒன்றியம் ஈரான் அதிகாரிகள் மீது பொருளாதார தடை விதிக்கவுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில் ஈரான், உலகின் முக்கியமான எரிவாயு மற்றும் எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் நீரிணையை முடக்கியது. இதனால் உலகளாவிய பொருளாதாரம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.
இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் (EU) இந்த நடவடிக்கையை “சர்வதேச சட்டத்திற்கு முரணானது” எனக் குறிப்பிட்டு, ஈரான் அதிகாரிகள் மீது புதிய தடைகளை விதிக்க முடிவு செய்துள்ளது.

இதற்காக ஐரோப்பிய ஒன்றியம், ஏற்கனவே உள்ள ஈரான் மீதான தடைகளை விரிவுபடுத்தும் நடவடிக்கையை எடுத்துள்ளது.
புதிதாக விதிக்கப்படவுள்ள தடைகளில், பயணத் தடை, சொத்து முடக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். மேலும், ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் மற்றும் நிறுவனங்கள், தடை பட்டியலில் உள்ளவர்களுக்கு நிதி அல்லது பொருளாதார ஆதாரங்களை வழங்குவதும் தடை செய்யப்படும்.
முன்னதாக, ஈரான் ரஷ்யாவிற்கு வழங்கிய இராணுவ உதவி மற்றும் மத்திய கிழக்கு ஆயுதக் குழுக்களுக்கு அளித்த ஆதரவுக்காக ஐரோப்பிய ஒன்றியம் தடைகளை விதித்திருந்தது. அதேபோல், மனித உரிமை மீறல்களுக்காகவும் ஈரான் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஈரானின் நடவடிக்கைகள் நீரிணை சுதந்திரத்தை பாதித்துள்ளதாக கூறியுள்ள ஐரோப்பிய ஒன்றியம், எதிர்காலத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.
இந்த முடிவு, உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலைக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
#IranCrisis #EUSanctions #HormuzStrait #GlobalEconomy #OilPrices #MiddleEastConflict #EnergyCrisis