பிரித்தானியாவில் உறைந்த ஏரியில் சிக்கிய இன்னொரு சிறுவனும்... நெஞ்சைப் பிசையும் தகவல்
பர்மிங்ஹாமில் உள்ள உறைந்து போயிருந்த ஏரியில் தவறி விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருந்து வந்த நான்காவது சிறுவனும் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நான்காவது சிறுவனும் மரணம்
குறித்த விபத்தில் சிக்கிய மூன்று சிறுவர்கள் ஏற்கனவே சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ள நிலையில், தற்போது 6 வயதுடைய நான்காவது சிறுவனும் மரணமடைந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
@PA
கடந்த ஞாயிறன்று நடந்த இச்சம்பவத்தை அடுத்து, தொடர்புடைய சிறுவன் பர்மிங்காம் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தான். இந்த நிலையிலேயே சிறுவன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஏற்கனவே இரு சிறுவர்களின் பெயர் உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் மூன்றாவது சிறுவன் மற்றும் 6 வயது நான்காவது சிறுவன் ஆகியோரின் பெயர்கள் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை.
இது நெஞ்சைப் பிசையும் துயர சம்பவம் என குறிப்பிட்டுள்ள வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலிசார், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதலையும் மரணமடைந்த சிறுவர்களுக்கு அஞ்சலியையும் செலுத்துவதாக தெரிவித்துள்ளனர்.
சிறுவர்களை காப்பாற்ற முயன்ற சிறுமி
இதனிடையே, சம்பவம் நடந்த ஏரியில் தேடுதல் நடவடிக்கைகள் அனைத்தும் முடித்துக் கொள்வதாகவும், பொலிஸ் கட்டுப்பாட்டில் இருந்து ஏரியை விடுவித்துள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
@PA
முன்னதாக 13 வயது சிறுமி ஒருவர், மரக்கிளைகளால் சிறுவர்களுக்கு உதவ முயன்றது ஊடகங்களில் வெளியாகியிருந்தது. 13 வயது Oliwia Szewc என்ற சிறுமி துணிச்சலுடன் அவர்களை காப்பாற்ற களமிறங்கியதும், அவர்களை காப்பாற்ற ஏதேனும் வழியிருக்கிறதா என்பதை முயற்சிக்கும் நிலையில் 999 இலக்கத்திற்கும் தொடர்பு கொண்டுள்ளதாக அந்த சிறுமி தெரிவித்திருந்தார்.
மட்டுமின்றி, அவசர உதவிக்குழுவினர் சம்பவயிடத்திற்கு வந்து சேரும் வரையில் Oliwia Szewc மற்றும் அவரது தோழிகள் அப்பகுதியில் காத்திருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.