அமெரிக்காவின் B-2 விமான தயாரிப்பில் பணியாற்றிய இந்தியருக்கு சிறை - பின்னணி என்ன?
அமெரிக்காவின் B-2 விமான தயாரிப்பில் பணியாற்றிய இந்திய வம்சாவளி நபர் ஏன் சிறையில் உள்ளார் என்பது குறித்து பார்க்கலாம்.
B-2 குண்டு வீச்சு விமானம்
ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையேயான போர் நடைபெற்று வந்த சூழலில், ஈரானில் உள்ள 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்க விமானம் குண்டு வீசியுள்ளது.
அமெரிக்காவின் ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்என்ற இந்த ராணுவ நடவடிக்கையில், B-2 ஸ்பிரிட் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானத்தை பயன்படுத்தி, 14,000 கிலோகிராம் எடையுள்ள GBU-57 என்ற குண்டுகளை ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது வீசியுள்ளது.
GBU-57 குண்டுகளை B-2 ஸ்பிரிட் விமானத்தில் மட்டுமே பொருத்த முடியும். இது முதன்முதலில் 1989ல் அறிமுகம் செய்யப்பட்டு, 1999 ல் கொசோவோ போரின் போது முதல் முறையாக அமெரிக்க விமானப்படையால் பயன்படுத்தப்பட்டது.
இந்த B-2 ஸ்பிரிட் விமானத்தை Northrop Grumman என்ற அமெரிக்கா விமான கட்டுமான நிறுவனம் தயாரித்தது.
இந்தியருக்கு சிறை
B-2 ஸ்டெல்த் உந்துவிசை அமைப்பை வடிவமைப்பதில் நோஷிர் கோவாடியா (Noshir Gowadia) என்ற இந்தியர் முக்கிய பங்கு வகித்தார். மேலும், அதன் உயர் மட்ட பாதுகாப்பு அனுமதியைப் பெற்றார்.
1944 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த கோவாடியா, 1963 ஆம் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து, அமெரிக்கா குடியுரிமையை பெற்றுள்ளார்.
1986 ஆம் ஆண்டில் Northrop Grumman நிறுவனத்தில் இருந்து வெளியேறிய கோவாடியா, சொந்தமாக ஆலோசனை நிறுவனத்தைத் தொடங்கினார்.
ஸ்டெல்த் தொழில்நுட்பம் உட்பட அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை சீனாவிற்கு அனுப்பியதற்காக 2005 ஆம் ஆண்டு கோவாடியா கைது செய்யப்பட்டார்.
2003 மற்றும் 2004 க்கு இடையில், சீனாவிற்கு பல முறை கோவாடியா பயணம் செய்ததற்கான ஆதாரங்களையும் FBI கண்டறிந்துள்ளது.
இந்த உதவிக்காக, 3 ஆண்டுகளில் அவர் 1,10,000 டொலர் ஊதியம் பெற்றதாக கூறப்படுகிறது. 2010 ஆம் ஆண்டில், 14 குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட கோவாடியாவிற்கு, 32 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தற்போது, அவர் அமெரிக்காவின் உயர் பாதுகாப்பு சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறார். இருப்பினும், இந்த விசாரணை நியாயமற்றது, தனது தந்தை தவறாக குற்றம் சாட்டப்பட்டதாக அவரது மகன் ஆஷ்டன் கோவாடியா கூறி வருகிறார்.
ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானம் உருவாகும் சீனா
மே 14, 2025 அன்று, சீனாவின் ஜின்ஜியாங்கில் உள்ள மாலன் அருகே ஒரு ரகசிய விமான தளத்தில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களில், ஒரு பெரிய ஸ்டெல்த் ட்ரோன் நிறுத்தப்பட்டுள்ளதை காண முடிந்தது.
HALE வகையிலான இந்த ட்ரோன், சீனாவின் அடுத்த தலைமுறை ஸ்டெல்த் திட்டங்களான H-20 குண்டுவீச்சு விமானம் மற்றும் J-36 போர் விமானம் ஆகியவற்றுடன் இணைக்கப்படலாம் என நிபுணர்கள் நம்புகின்றனர்.
இந்த ட்ரோனின் இறக்கைகள், கிட்டத்தட்ட அமெரிக்க B-2 குண்டுவீச்சு விமானத்தைப் போலவே இருப்பதால், சீனா இதை சொந்தமாக உருவாக்கியதா அல்லது திருடப்பட்ட வடிவமைப்புகளுடன் உருவாக்கியதா என்ற கேள்விகளை எழுப்புகிறது.
விரைவில் சீனாவும், அமெரிக்காவின் B-2 போன்ற திறன் கொண்ட ஒரு ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானத்தை உருவாக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |