இஸ்ரேல் - ஈரான் போருக்கு நடுவே... அரிதான பயணம் மேற்கொண்ட இந்த மர்மமான விமானம்
ஈரான் - இஸ்ரேல் நடுவே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்காவும் களமிறங்கலாம் என்ற அச்சத்தின் மத்தியில் E-4B Nightwatch விமானம் வாஷிங்டனில் தரையிறங்கியுள்ளது பல ஊகங்கள் கிளப்பியுள்ளது.
Doomsday விமானம்
அணு குண்டு தாக்குதலில் இருந்துகூட தப்பிக்கும் இந்த E-4B Nightwatch விமானமானது ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. அது லூசியானாவின் போசியர் நகரத்திலிருந்து புறப்பட்டு, மேரிலாந்தில் தரையிறங்கி, நான்கு மணி நேரம் கழித்து வர்ஜீனியா-வட கரோலினா எல்லையைச் சுற்றி வந்தது.
அமெரிக்காவின் E-4B Nightwatch விமானமானது Doomsday விமானம் என்றும் அழைக்கப்படுகிறது. மட்டுமின்றி, எந்தவொரு அணுசக்தி அவசரநிலையின் போதும் அமெரிக்க ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் பிற முக்கிய அதிகாரிகளுக்கு பறக்கும் கட்டளை மையமாக செயல்படும் ஒரு சிறப்பு விமானம் இது.
இது அணு குண்டுவெடிப்பு, சைபர் தாக்குதல்கள் மற்றும் மின்காந்த விளைவுகளைத் தாங்கும் திறன் கொண்டது. இந்த விமானத்தை flying pentagon என்றும் அழைக்கிறார்கள்.
விமானத்தின் உள்ளே, மூன்று தளங்களில் 18 படுக்கைகள், விளக்கமளிக்கும் அறைகள், மாநாட்டுப் பகுதிகள் மற்றும் ஓய்வு இடங்கள் உள்ளன. அவசரகாலங்களின் போது கட்டளை, கட்டுப்பாடு மற்றும் தகவல்தொடர்புகளைப் பராமரிக்க முடியும் என்பதால், எந்தவொரு நெருக்கடி நிலையிலும் அரசாங்கத்தை தொடர்ந்து செயல்பட வைக்கும் திறன் இதற்கு உண்டு.
ஒரு வாரம் தரையிறங்காமல்
அமெரிக்க விமானப்படையிடம் E-4B Nightwatch விமானமானது 4 எண்ணிக்கையில் உள்ளது. ஒவ்வொரு விமானமும் 112 பணியாளர்களை ஏற்றிச் செல்ல முடியும். மேலும், 7,000 மைல்களுக்கு மேல் சென்று பறக்கும் திறன் கொண்ட இந்த விமானம், பதிலடி ஏவுகணைகளை ஏவுவதற்கு ஏற்றதாக அமைக்கப்பட்டுள்ளது.
இது மேம்பட்ட செயற்கைக்கோள் தொடர்பு அமைப்புகளைக் கொண்டுள்ளது, அதன் கதிர் குவிமாடத்தில் உள்ள 67 செயற்கைக்கோள் டிஷ்கள் மற்றும் ஆண்டெனாக்கள் காரணமாக உலகில் எங்கும் தொடர்பு கொள்ளும் திறன் கொண்டது.
இந்த விமானம் நடுவானில் எரிபொருள் நிரப்பும் திறன் கொண்டதால், தரையிறங்காமல் ஒரு வாரம் வானத்தில் பறக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |