போரை உடனடியாக நிறுத்தலாம்... விளாடிமிர் புடின் முன்வைக்கும் விவகாரமான நிபந்தனை
உக்ரைனில் உடனடி போர்நிறுத்தம் குறித்து பரிசீலிக்க விளாடிமிர் புடின் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச சமூகம் நிலைகுலைந்து
இருப்பினும் அந்த முடிவானது கடுமையான மற்றும் சர்ச்சைக்குரிய நிபந்தனைகளின் கீழ் இருக்கும் என்றே கூறப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் பொறுப்புக்கு வந்ததில் இருந்தே, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அவர் கடும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.
ஒரே நாளில் தம்மால் போரை முடிவுக்கு கொண்டுவர முடியும் என பல மேடைகளில் கூறி வந்த டொனால்டு ட்ரம்ப், போரை தொடங்கிய ரஷ்யாவுக்கு நெருக்கடி அளிப்பதற்கு பதிலாக தற்போது உக்ரைனை தனிமைப்படுத்தி, ஆயுத உதவிகளை ரத்து செய்து நெருக்கடி அளித்து வருகிறார்.
மட்டுமின்றி, நீண்டகால அமெரிக்கக் கொள்கையை அதிரடியாக மாற்றியமைப்பதில் ட்ரம்ப் ஈடுபட்டுள்ளதால் சர்வதேச சமூகம் நிலைகுலைந்து போயுள்ளது. ரஷ்ய ஆதரவாக சில நகர்வுகளை முன்னெடுத்துள்ள ட்ரம்ப் நிர்வாகம், போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் மீது அதிகரித்த அழுத்தத்தையும் செலுத்தி வருகிறது.
உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பில் உக்ரைனை தவிர்த்து அமெரிக்கா பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது உக்ரைனையும் அதன் மேற்கத்திய நேச நாடுகளையும் கலக்கமடைய வைத்துள்ளது.
போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனின் கரங்களை வலுப்படுத்துவதற்கு பதிலாக ரஷ்யாவை வலுப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. அமைதி வேண்டும் என உக்ரைன் தொடர்ந்து முயற்சிகள் முன்னெடுத்தபோதிலும், புடின் தனது கோரிக்கைகளில் உறுதியாக இருக்கிறார்.
போர் நிறுத்தம் தேவையில்லை
ரஷ்ய அரசாங்கத்திற்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து வெளியான தகவலின்படி, உக்ரேனிய மண்ணில் நேட்டோ துருப்புக்களை களமிறக்குவது உள்ளடக்கிய எந்தவொரு போர்நிறுத்த திட்டத்தையும் ரஷ்யா நிராகரிக்கும்.
இதனால், தற்போது பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் முன்னெடுக்கும் முயற்சிகள் எதையும் ரஷ்யா ஏற்காது என்பது உறுதியாகியுள்ளது. வெளியே போர் நிறுத்த ஆதரவு நிலையில் புடின் உறுதியாக இருப்பதாக கூறப்பட்டாலும், உக்ரைன் மீதான அவரது நிலைப்பாடில் எந்த மாற்றமும் இல்லை என்றே கூறப்படுகிறது.
கடந்த டிசம்பரில் இந்த விவகாரம் குறித்து பேசிய புடின், எங்களுக்கு ஒரு போர் நிறுத்தம் தேவையில்லை. எங்களுக்கு அமைதி தேவை: நீண்ட கால, நீடித்த, ரஷ்யாவுக்கு அதன் குடிமக்களுக்கு உரிய உத்தரவாதங்களுடன் என்றே அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உக்ரைன் விவகாரத்தில் பிரித்தானியாவும் பிரான்சும் தலையிடுவதை விளாடிமிர் புடின் கடுமையாக எதிர்த்துள்ளார். மட்டுமின்றி, அவர்களின் செயல்பாடு போதுமானதாக இல்லை என்றும் நம்பும்படியாக இல்லை என்றும் புடின் விமர்சித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |