வெளியுலக மக்களைக் கண்டாலே கடுமையாக தாக்கும் ஆதிவாசிகள்: பல ஆண்டுகளுக்குப் பின் வெளியாகியுள்ள மோசமான காரணம்
வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள அந்தமான் தீவுகளில் ஒன்று வட சென்டினல் தீவு. அங்கு, Sentinelese என்னும் ஒரு கூட்டம் ஆதிவாசிகள் வாழ்கிறார்கள். பாதுகாக்கப்பட்ட அந்த பகுதிக்குச் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை.
தீவுக்கருகே சென்றவர்களுக்கு நேர்ந்த கதி
2006ஆம் ஆண்டு, இந்திய மீனவர்கள் சிலர் அந்த தீவின் அருகில் சட்ட விரோதமாக நண்டு பிடிக்கச் சென்றுள்ளார்கள். அவர்களில் சுந்தர் ராஜ் (48) மற்றும் பண்டித் திவாரி (52) என்னும் இருவர் இரவில் படகில் நங்கூரம் பாய்ச்சிவிட்டு தங்கள் படகுகளிலேயே தூங்கிவிட்டிருக்கிறார்கள். அவர்கள் தூங்கும்போது, படகு மெல்ல நகர்ந்து சென்டினல் தீவின் அருகே சென்றுவிட்டிருக்கிறது.
Image: Facebook
மறுநாள் காலை, அவர்களுடைய சக மீனவர்கள் கண்விழித்துப் பார்க்கும்போது, சுந்தர் ராஜ் மற்றும் பண்டித் திவாரியின் படகு சென்டினல் தீவுக்கு அருகே இருப்பதைக் கண்டு சத்தமிட்டு அவர்களை எழுப்ப முயன்றிருக்கிறார்கள்.
ஆனால், அவர்களை எழுப்பமுடியவில்லை. அந்த ஆதிவாசிகள் அவர்களைப் பிடித்துக் கொன்று மூங்கில் கம்பங்களில் குத்தித் தொங்கவிட்டுவிட்டார்கள்.
Image: Wikipedia
அதற்குப் பின், 2018ஆம் ஆண்டு, கிறிஸ்தவ மிஷனெரியான John Allen Chau என்பவர் அந்தத் தீவினரை சந்திக்க முயன்றிருக்கிறார், அவரும் கொல்லப்பட்டுவிட்டார்.
பல ஆண்டுகளுக்குப் பின் வெளியாகியுள்ள காரணம்
எதனால் இந்த வட சென்டினல் தீவில் வாழும் ஆதிவாசிகள் யாரையும் தங்கள் தீவில் கால்வைக்க விடமாட்டேன்கிறார்கள் என்பது நீண்ட காலத்துக்கு தெரியாத விடயமாகவே இருந்தது.
ஆனால், அவர்கள் நடந்துகொள்ளும் விதத்தின் பின்னணியில் மோசமான ஒரு சம்பவம் உள்ளது என்பது தற்போது தெரியவந்துள்ளது.
Image: Alamy Stock Photo
ஆம், அந்தமானில் இருந்த சிறை ஒன்றில் அதிகாரியாக பணிபுரிந்தவரான மாரிஸ் (Maurice Vidal Portman) என்னும் கனேடிய பிரித்தானியர், இந்த வட சென்டினல் தீவில் வாழும் ஆதிவாசிகள் சிலரைக் கடத்திச் சென்றுள்ளார்.
விடயம் என்னவென்றால், வெளியுலகில் வாழும் மக்களுக்கு சாதாரணமாக வரும் நோய்களைக் கூட இந்த ஆதிவாசிகளால் தாங்கிக்கொள்ள முடியாது. ஆகவே, அவர் கடத்திவந்தவர்களில், வயதுவந்த இருவர் உயிரிழந்துவிட்டிருக்கிறார்கள்.
அது மட்டுமின்றி, அந்த ஆதிவாசிகள் மற்றும் அந்த பகுதியிலுள்ள ஆதிவாசிகள் பலரை மோசமான முறையில் புகைப்படம் எடுத்துள்ளார் மாரிஸ். குறிப்பாக அவர்களுடைய பாலின உறுப்புக்களை குறிவைத்தே அவர் புகைப்படம் எடுத்தார் என்பது சமீபத்தில் வெளியாகியுள்ள வரலாற்றுக் குறிப்புகள் வாயிலாக தெரியவந்துள்ளது.
Image: ASSOCIATED PRESS
அத்துடன், தான் கடத்திவந்தவர்களில் உயிர் பிழைத்த சிறுவர்களை அவர் மீண்டும் வட சென்டினல் தீவுக்கே அனுப்ப, அவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு கொடிய நோய்கள் பரவியதாக கூறப்படுகிறது.
ஆக, தங்கள் மக்களைக் கடத்திச் சென்றவர்கள் அனுபவித்த அவமானம் மற்றும் அவர்களால் பரவிய நோய்கள் போன்ற மோசமான விடயங்களே, வெளி உலக மக்கள் மீது அவர்களுக்கு வெறுப்பையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது. ஆகவேதான், வெளியுலகைச் சேர்ந்த யார் தங்கள் தீவுக்கருகே வந்தாலும், அவர்களை வட சென்டினல் தீவில் வாழ்பவர்கள் தாக்குகிறார்கள் போலும் என்பது தற்போது தெளிவாகியுள்ளது.
விடயம் என்னவென்றால், பின்னொருமுறை, மீண்டும் வட சென்டினல் தீவுக்குச் சென்று அந்த மக்களை சந்திக்க முயன்றாராம் மாரிஸ். ஆனால், அவரைக் கண்டதுமே காட்டுக்குள் ஓடி ஒளிந்துகொண்டார்களாம் அந்த தீவுவாசிகள்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |