தாய்லாந்து சென்ற 5,000 அமெரிக்க கடற்படையினர் - பட்டாயாவில் பொலிஸ் சோதனைகள் தீவிரம்
US sailors arrive Pattaya raids intensify: ஒரே நேரத்தில் 5,000 அமெரிக்க கடற்படையினர் தாய்லாந்து சென்றுள்ளதால், சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரிக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அமெரிக்க கடற்படை கப்பல்கள்
தாய்லாந்தின் பிரபல சுற்றுலா நகரமான பட்டாயாவில், அமெரிக்காவின் USS Abraham Lincoln விமானக் கப்பல் மற்றும் இரண்டு கடற்படை கப்பல்கள் தங்கவுள்ளதால், 5,000-க்கும் மேற்பட்ட கடற்படையினர் மற்றும் மாலுமிகள் வருகை தருகின்றனர்.
இதனால் நகரத்தில் சட்டம்-ஒழுங்கு சவால்கள் அதிகரிக்கும் எனக் கருதி, பொலிசார் கடுமையான சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வார இறுதி சோதனைகளின் விளைவாக, ஏற்கெனவே 40 முதல் 50 பேர் வரை விபச்சார சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நகரின் கடற்கரை, இரவு வாழ்க்கை மையங்கள் மற்றும் முக்கிய சுற்றுலா பகுதிகளில் பொலிஸ் ரோந்துகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
பட்டாயா பொலிஸ் தலைவர் அனேக் ஸ்ரத்தோங்யூ கூறியதாவது: “பாலியல் தொழிலை முழுமையாகக் கட்டுப்படுத்துவது கடினம். பொதுவிடங்களில் தொழிலாளர்கள் வாடிக்கையாளர்களை அணுகலாம், அதை உடனடியாக கண்டறிவது சாத்தியமில்லை” என்றார்.
பொருளாதார வளர்ச்சி
இந்நகரம் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு துறையை அடிப்படையாகக் கொண்டதால், அமெரிக்க கடற்படையினரின் வருகை ஹோட்டல்கள், உணவகங்கள், பார்கள், கடைகள் போன்றவற்றில் குறுகிய காலத்தில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
பட்டாயா மேயர் போரமாஸே நகம்பிச்சஸ் கூறியதாவது: “ஒவ்வொரு கடற்படையினரும் தினமும் 1,000 முதல் 3,000 பாத் (சுமார் 30-91 டொலர்) வரை செலவிடுவார்கள். இது நகரின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும்” என்றார்.
பாலியல் தொழில்
பட்டாயா, வியட்நாம் போருக்காலத்தில் அமெரிக்க வீரர்கள் ஓய்வு மற்றும் பொழுதுபோக்கிற்காக வந்ததிலிருந்து, சுற்றுலா மற்றும் பாலியல் தொழில் மையமாக வளர்ந்தது. தாய்லாந்தில் பாலியல் தொழில் சட்டவிரோதமானது என்றாலும், பட்டாயா மற்றும் பாங்காக் போன்ற நகரங்களில் அது வெளிப்படையாகத் தொடர்கிறது.
USS Abraham Lincoln கப்பல், 200 நாட்களுக்கு மேல் கடலில் இருந்தது. இது சமீபத்திய வரலாற்றில் நீண்ட கால பணியிடைமாற்றமாகக் கருதப்படுகிறது. நீண்ட கால கடற்படை பணியால், கப்பலில் மன அழுத்தம் மற்றும் தற்கொலை முயற்சிகள் அதிகரித்ததாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |