இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் என்ன பிரச்சினை? மூன்றாம் உலகப்போர் அச்சம் உருவாக காரணமாக அமைந்த நிகழ்வுகள்
இஸ்ரேல் காசா மோதலாகத் துவங்கிய விடயம் இன்று இஸ்ரேல் ஈரான் மோதலாக உருவெடுத்துள்ள நிலையில், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் என்ன பிரச்சினை என்பதை இங்கு காணலாம்.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் என்ன பிரச்சினை?
கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் 7ஆம் திகதி, இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய திடீர்த்தாக்குதல் காசா இஸ்ரேல் போராக வெடிக்க, இஸ்ரேல் காசா மோதலாகத் துவங்கிய விடயம் இன்று இஸ்ரேல் ஈரான் மோதலாக உருவெடுத்துள்ளது.
அக்டோபர் 7: இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீர்த்தாக்குதல்
அக்டோபர் 7ஆம் திகதி, திடீரென ஹமாஸ் ஆயுதக்குழு தெற்கு இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது. அதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்க, காசாவில் பெண்கள் குழந்தைகள் உட்பட பலியானவர்கள் எண்ணிக்கை 33,000ஐ தாண்டியது.
ஹமாஸ் தாக்குதலுக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என ஈரான் மறுக்க, பாலஸ்தீனத்தின் ஹமாஸ், லெபனானின் ஹிஸ்புல்லா, ஏமனின் ஹவுதிக்கள், சிரியா அரசு அற்றும் ஈராக்கிலுள்ள சில குழுக்கள் என பல எதிர்ப்புக் குழுக்களுக்கு ஈரான் ஆதரவளித்துவருவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியது.
அக்டோபர் 17: இஸ்ரேலுக்கெதிராக ஈரான் எச்சரிக்கை
லெபனான் இஸ்ரேல் எல்லையில், ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இஸ்ரேலுக்குமிடையே மோதல்கள் துவங்க, ஈரான் வெளியுறவு அமைச்சர் Hossein Amirabdollahianம், ஈரான் உச்ச தலைவரான Ayatollah Ali Khameneiயும் இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், காசா மீதான மோதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்கள்.
நவம்பர் 19: செங்கடலில் கப்பல் ஒன்று கைப்பற்றிய ஹவுதிகள்
ஏமனை மையமாகக் கொண்ட, ஈரான் ஆதரவு அமைப்பான ஹவுதிகள், செங்கடலில் சரக்குக் கப்பல் ஒன்றைக் கைப்பற்றினார்கள். காசாவிலுள்ள பாலஸ்தீன சகோதர்களுக்கு தங்கள் ஆதரவை காட்டுவதற்காக இஸ்ரேலுக்குச் செல்லும் கப்பல்களை கைப்பற்றுவதாக ஹவுதிகள் கூறினார்கள்.
விடயம் என்னவென்றால், அவர்கள் கைப்பற்றியது இஸ்ரேல் கப்பலே அல்ல. அதற்குப் பிறகு, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கப்பல்கள் செங்கடலில் தொடர்ந்து குறிவைக்கப்பட்டன.
டிசம்பர் 18: சைபர் தாக்குதல் நிகழ்த்தியதாக இஸ்ரேல் மீது ஈரான் குற்றச்சாட்டு
சைபர் தாக்குதல் காரணமாக ஈரானிலுள்ள 70 சதவிகித எரிபொருள் நிலையங்கள் செயலிழக்க, அதற்குக் காரணம் இஸ்ரேல்தான் என ஈரான் குற்றம் சாட்டியது.
டிசம்பர் 25: இஸ்ரேல் தாக்குதலில் சிரியாவில் மூத்த ஈரான் தளபதி பலி
சிரியாவின் தலைநகருக்கு வெளியே இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் மூத்த தளபதிகளில் ஒருவரான Sayyed Razi Mousavi கொல்லப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் குற்றம் சாட்டின.
ஜனவரி 15: வட ஈராக்கிலுள்ள இஸ்ரேல் உளவு ஏஜன்சி மீது ஈரான் தாக்குதல்
ஜனவரி 15ஆம் திகதி, வட ஈராக்கில் Erbil என்னுமிடத்தில் அமைக்கப்பட்டுள்ள Mossad என்னும் இஸ்ரேல் உளவு ஏஜன்சி என்று ஈரான் அழைத்த அமைப்பின்மீது மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நிகழ்த்தியது. இந்த தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டார்கள், ஆறு பேர் காயமடைந்தார்கள்.
ஜனவரி 20: டமாஸ்கஸ் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானியர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் குற்றச்சாட்டு
ஜனவரி 20ஆம் திகதி, டமாஸ்கஸிலுள்ள குடியிருப்பு ஒன்றின் மீது இஸ்ரேல் தாக்குதல் நிகழ்த்தியதாகவும், ஈரான் ராணுவப்பிரிவொன்றின் ஆலோசகர்கள் ஐந்துபேர் கொல்லப்பட்டதாகவும் ஈரான் குற்ரம் சாட்டியது.
பிப்ரவரி 10: இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்த ஈரான்
லெபனானுக்கு வருகை புரிந்த ஈரான் வெளியுறவு அமைச்சரான Amirabdollahian, லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், அதுதான் இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாகுவின் வாழ்வில் கடைசி நாளாக இருக்கும் என எச்சரித்தார்.
பிப்ரவரி 21: எரிவாயுக் குழாய்களை வெடிக்கச் செய்ததாக இஸ்ரேல் மீது ஈரான் குற்றச்சாட்டு
ஈரானுக்கு எரிவாயு கொண்டு செல்லும் எரிவாயுக் குழாய்கள் சேதப்படுத்தப்பட, பல பகுதிகள் பாதிக்கப்பட்டன. இஸ்ரேல்தான் எரிவாயுக் குழாய்களை வெடிக்கச் செய்ததாக ஈரான் குற்றம் சாட்டியது.
மார்ச் 1: ஈரான் ராணுவப்பிரிவான IRGC தளபதி பலி
சிரியாவில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல் ஒன்றில், ஈரான் ராணுவப்பிரிவான IRGCயின் தளபதி ஒருவர் உட்பட மூன்று பேர் பலியாக, அதற்கு இஸ்ரேல்தான் காரணம் என ஈரான் குற்றம் சாட்டியது.
ஏப்ரல் 1: டமாஸ்கஸிலுள்ள ஈரானிய தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி, சிரியாவின் டமாஸ்கஸிலுள்ள ஈரானிய தூதரகம் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் என சந்தேகிக்கப்படும் தாக்குதல் ஒன்றில் முற்றிலும் சேதமாக, ஈரான் தளபதி ஒருவர் உட்பட 13 பேர் பலியானர்கள். அந்த தாக்குதல் தொடர்பில் இஸ்ரேல் மீது ஈரான் குற்றம்சாட்டியது.
ஏப்ரல் 13: இஸ்ரேல் தொடர்புடைய கப்பலை ஈரான் கைப்பற்றல்
ஏப்ரல் 13ஆம் திகதி, இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல் ஒன்றை ஈரான் ராணுவம் கைப்பற்ற, அது சர்வதேச விதிமீறல் என இஸ்ரேல் விமர்சித்தது.
ஏப்ரல் 13: இஸ்ரேல் மீது ஈரான் சரமாரியாக ஏவுகணைத் தாக்குதல்
ஏப்ரல் 13ஆம் திகதி, இரவில் ஈரான் இஸ்ரேல் மீது 300க்கும் அதிகமான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கல் மூலம் தாக்குதல் நிகழ்த்த, ஒரு ஏழு வயது சிறுமி உட்பட பலர் காயமடைந்தனர்.
அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா உதவியுடன் இஸ்ரேல் அந்த ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியது.
ஈரான் தாக்க, இஸ்ரேல் பதிலடி கொடுக்க, இப்படியே தொடர்ந்து இரு நாடுகளும் மாறி மாறி தாக்கிகொள்ள, இப்படித்தான் ஹமாஸ் இஸ்ரேல் மோதலாகத் துவங்கிய பிரச்சினை, இன்று மூன்றாம் உலகப்போர் அச்சம் உருவாகும் நிலையை எட்டியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |