உலகம் முழுவதும் ஏற்படுகின்ற காற்று மாசு காரணமாக ஏறத்தாழ அரை மில்லியன் குழந்தைகள் தங்களது முதல் மாதத்திலேயே உயிரிழக்கின்றனர். இது வளரும் நாடுகளில் அதிக அதிக அளவில் உள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவை தளமாகக் கொண்டு செயல்படுகின்ற State of Global Air என்கிற தனியார் நிறுவனம் மேற்குறிப்பிட்டுள்ள புள்ளிவிவரங்களை வழங்கியுள்ளது.
காற்று மாசானது கருவிலேயே குழந்தைகளை பாதிக்கின்றது. இதன் காரணமாக குறை பிரசவம் மற்றும் குறைந்த எடையில் குழந்தைகள் பிறப்பது போன்றவை ஏற்படுகின்றன. குழந்தைகள் உயிரிழப்பிற்கு இந்த இரண்டு காரணிகளும் முக்கியமானதாகும்.
திட எரிபொருளான கரி, மரக்கட்டை, மற்றும் விலங்குகளின் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் எரிபொருட்கள் 5,00,000-ல் மூன்றில் ஒரு பங்கு குழந்தையை பலிவாங்கிவிடுகிறது என இந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே பல ஆய்வாளர்கள் காற்று மாசு குறித்தும், அதனால் வயதானோர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் எச்சரித்திருந்த நிலையில், இந்நிறுவனம் காற்று மாசு கருவில் உள்ள குழந்தைகளையும் பாதிக்கும் என்று கூறியிருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
“இந்த காலகட்டத்தில் என்ன வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்பது பெரிய விடயமல்ல. குழந்தைகள் எந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை கவனிப்பதுதான் மிக முக்கியம். குழந்தைகள் குறை பிரசவத்திலும், எடை குறைவாகவும் பிறப்பது பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வெளிவந்துள்ளது.” என ஹெல்த் எஃபெக்ட்ஸ் இன்ஸ்டிடியூட்டின் முதன்மை விஞ்ஞானியான கேத்ரின் வாக்கர் மேற்குறிப்பிட்ட புள்ளிவிவரங்களை வெளியிட்டு கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் கடந்த (2019) ஆண்டு ஏறத்தாழ 6.7 மில்லியன் மக்கள் காற்று மாசால் உயிரிழந்துள்ளனர். தற்போது வெளியிடப்பட்டுள்ள விவரங்கள் 2019-ம் ஆண்டின் கணக்கெடுப்பு என்பது குறிப்பிடத்தக்கது.