தமிழகத்தில் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து இளைஞரை இளம் பெண் ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், உண்மை தெரிந்த காதலன், ஆத்திரத்தில் அந்த பெண்ணின் குழந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி. இவருக்கு லாவண்யா என்ற 20 வயது மகள் உள்ளார்.
இந்நிலையில், லாவண்யா, கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் என்பவரை காதலித்து வர, இவர்கள் இருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணத்திற்கு பின் இருவரும், கே.வி.குப்பம் சீதாராம் பேட்டையில் உள்ள வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்துள்ளனர்.
திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் கடந்த நிலையில், லாவண்யா தனது சகோதரியின் 2 வயதுப் பெண் குழந்தை ஒன்று தாய் வீட்டில் இருப்பதாகவும், தன் மீது அதிகம் பிரியம் வைத்திருப்பதால் அக்குழந்தையை வாங்கி வரும்படி கணவர் பிரவீன்குமாரிடம் தெரிவித்துள்ளார்.
அதன் படி பிரவீன் குழந்தையை தூக்கி வர, லாவணயா அந்த குழந்தைகள் அன்புடன் நான்கு நாட்களாக பராமரித்து வந்துள்ளார்.
இதைக் கண்ட பிரவீன்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் இந்த குழந்தைக்கு உண்மையான தாய் யார் என்று லாவண்யாவிடம் கேட்க, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அதன் பின் ஒரு கட்டத்தில், லாவண்யா தான் ஏற்கனவே சக்திவேல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், அவருக்கு பிறந்தது தான் இந்த குழந்தை, கணவரிடம் சண்டை போட்டு தாய் வீட்டிற்கு வந்த நேரத்தில் தான் தனக்கு திருமணம் ஆகவில்லை என்று பொய் கூறி திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார்.
இதைக் கேட்டு ஆத்திரமடைந்த பிரவீன் குமார், நம்ப வைத்து ஏமாற்றிவிட்டதாக கூறி, தினமும் மது குடித்து, போதையில் வந்து சண்டை போட்டு வந்துள்ளார்.
அப்படி கடந்த செவ்வாய் கிழமை இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட, கோபத்தின் உச்சிக்கு சென்ற பிரவீன்குமார்
வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது பெண் குழந்தையை பிடித்து தூக்கி வீசியதால், சுவற்றில் மோதிய குழந்தை அந்த இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தது.
இதையடுத்து, குழந்தையின் கொலையை மறைக்க திட்டமிட்ட லாவண்யாவும், பிரவின்குமாரும் சேர்ந்து, சடலத்தை குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று, குழந்தை குப்புற விழுந்து மயக்கம் அடைந்ததாக கூறியுள்ளனர்.
குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், அது ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதிபடுத்தினர். இது குறித்து லாவண்யா தன்னுடைய முதல் கணவரிடம் குழந்தை இறந்தது பற்றி கூற, அவருக்கு தன்னுடைய குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து பிரேதபரிசோதனை அறிக்கையில், குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்தது தெரியவந்துள்ளது.
அதன் பின் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், இருவரும் நடந்ததை ஒப்புக் கொள்ள, பொலிசார் கைது செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.