தமிழகத்தில் இருக்கும் ஆதினம் ஒன்று அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் மற்றும் கமலா ஹரீஷ் வெற்றி பெறுவார்கள் என்று கணித்து கூறியுள்ளது.
அமெரிக்காவின் 46-வது அதிபராகவுள்ள ஜோ பைடனுக்கும், துணை அதிபராகவுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹரீஷுக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் இவர்கள் இருவருக்கும், மதுரை ஆதினம் வாழ்த்துகள் தெரிவித்துள்ளது. மதுரை ஆதினம், புதிய அரசுக்கு டிரம்ப் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை ஒன்றையும் வைத்துள்ளது.
இது தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள மதுரை ஆதினம், அமெரிக்காவின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் மற்றும் துணை அதிபராகப் பொறுப்பேற்க உள்ள கமலா ஹாரிஸ்க்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜோ பைடனும், கமலா ஹாரிசும் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவார்கள் என இரண்டு வருடத்திற்கு முன்பே அமெரிக்கா வாழ் இந்தியர்களிடம் கூறி இருக்கிறேன். இருவரும் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய-அமெரிக்க ஆப்ரிக்கா-கறுப்பின மக்கள் வாழும் நாட்டு மக்களிடையே நல்ல ஒற்றுமை ஏற்படும் என நம்புகிறேன்.
புது அரசுக்கு முன்னாள் அதிபர் டிரம்ப் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். புதிய அரசுக்கு எதிராக முன்னாள் அதிபர் டிரம்ப் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.