ஸ்பெயினிலிருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வந்த இளம்பெண் ஒருவர் கொரோனா ஊரடங்கால் கிராமத்து வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது.
ஸ்பெயினை தாயகமாக கொண்டவர் ட்ரெசா சொரியனோ(வயது 34), அங்கு தொழில்துறை வடிவமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.
அங்கே சக ஊழியரும், இந்தியருமான கிருஷ்ணா பூஜாரி நட்பாகி இருவரும் நல்ல நண்பர்களாகினர்.
இந்தியாவின் பெருமைகள் பற்றி கிருஷ்ணா கூற, இந்தியாவிற்கு செல்ல வேண்டும் என ட்ரெசா எண்ணியுள்ளார்.
இதன்படி கடந்த மார்ச் மாதம் இந்தியா வந்தடைந்தார், மே மாதம் தாயகம் திரும்பலாம் என எண்ணியிருந்த ட்ரெசாவுக்கு கொரோனா ஊரடங்கால் இங்கேயே சிக்கிக் கொண்டார்.
எப்படியோ ஒருவழியாக கிருஷ்ணாவின் வீட்டை அடைந்த ட்ரேசா, தற்போது கிராமத்து வாழ்க்கையை அழகாக வாழ்ந்து கொண்டிருக்கிறாராம்.
இதுபற்றி ட்ரெசா கூறுகையில், ஊரடங்கு வேளையில் கிராமப் பகுதியில் தங்க வாய்ப்பு கிடைத்ததை அதிர்ஷ்டமாகவே கருதுகிறேன். மற்ற நகரங்களைக் காட்டிலும் கிராமப்புற மக்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்கின்றனர்.
இயற்கையான சூழலில் வேலை செய்யவும், பொழுதைக் கழிக்கவும் இங்கு நிறைய சுதந்திரம் கிடைக்கிறது. இந்த புதிய அனுபவத்தில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.
ஹெரஞ்சல் கிராமத்தில் கடலை அறுவடை, மாடுகளிடம் பால் கறப்பது, நெற்பயிர்கள் நடுவது, ஆறுகளில் மீன் பிடிப்பது, காடுகளில் இருந்து இலை, தழைகளைச் சேகரிப்பது, ரங்கோலி இடுவது, தென்னை மரத்தில் இருந்து துடைப்பம் தயாரிப்பது போன்ற விஷயங்களைக் கற்றுக் கொண்டேன்.
கன்னட மொழி கற்றுக்கொண்டேன், எனக்கு தற்போது ஓர் இந்திய குடும்பம் உறவாகிப் போனது. அவர்கள் என்னை மகளைப் போன்று நினைத்து பாசம் காட்டுகின்றனர் என நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.