சன்ரைசர்ஸ் ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் துடுப்பாட்டம் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ஓட்டங்கள் எடுத்தது.
127 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை எதிர்கொண்டு ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக களம் கண்ட வார்னர் - பேர்ஸ்டோவ் ஜோடி அதிரடி தொடக்கம் தந்தனர்.
இந்நிலையில் 7வது ஓவரில் வார்னர் 35 ஓட்டங்களிலும், 8வது ஓவரில் பேர்ஸ்டோவ் 19 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய அப்துல் சமத் 9 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின் ஜோடி சேர்ந்த விஜய் சங்கர் மற்றும் மணீஷ் பாண்டே சற்று பொறுமையாக ஓட்டங்களை சேர்த்து அணியின் வெற்றிக்கு அருகில் சென்றபோது 17வது ஓவரில் மணீஷ் 15 ஓட்டங்களில் ஆட்டமிழக்க அடுத்த ஓவரிலேயே விஜய் சங்கரும் 26 ஓட்டங்களுக்கு வெளியேறினார்.
ஜோர்டன் வீசிய 19 வது ஓவரில் ஹோல்டர்(5), ரஷித் கான்(0) அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஆட்டம் பஞ்சாப் அணி பக்கம் திரும்பியது.
பரப்பரப்பான ஆட்டத்தின் கடைசி ஓவரை வீசிய முருகன் அஸ்வினின் 2வது பந்தில் சந்தீப்(0), 3வது பந்தில் கார்க் (3) என அடுத்தடுத்து வெளியேற்ற, 5வது பந்தில் கலீல் ரன் அவுட்டானார்.
இதன்மூலம், 10 விக்கெட்டையும் கைப்பற்றி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஒரு பந்து மீதி இருக்கும் நிலையில் பஞ்சாப் அணி மிரட்டல் வெற்றி பெற்றது.
பஞ்சாப் அணி சார்பில் ஜோர்டன் மற்றும் அர்ஸ்திப் சிங் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்கள்.